மியான்மரில் மாணிக்கக்கல் சுரங்கம் ஒன்றில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் 70 பேர் காணாமல் போயுள்ளனர்.
வடக்கு மியான்மரில் பகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்திலே இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 4 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்தச் சுரங்கத்தில் சட்டவிரோதமாக பணியாற்றிய தொழிலாளர்களே மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள நிலையில் அவா்களை மீட்கும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மியான்மர் உலகின் மிகப்பெரிய பச்சை மாணிக்க தொழில்துறை நாடாக உள்ளது. எனினும் பாதுகாப்பற்ற சுரங்கத் தொழிலால் பல ஆண்டுகளாக ஏராளமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
முறையற்ற சுரங்கத் தொழிலுக்கு மியான்மரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளூர்வாசிகள் விதிமுறைகளை மீறி ஆபத்தான வகையில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலையின்மை மற்றும் கொவிட்-19 தொற்றுநோயால் அதிகரித்துள்ள வறுமை போன்ற காரணிகளால் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பெருமளவானவர்கள் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் இவ்வாறான சுரங்கமொன்றில் கழிவுகள் திடீரெனச் சரிந்ததால் அதில் சிக்கி 160 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
மாணிக்க கல் வர்த்தகம் மூலம் மியான்மர் ஆண்டுக்கு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டுவது குறிப்பிடத்தக்கது.